தாஜ்மஹாலில், கங்கை நீரை தெளித்து, காவிக் கொடியை ஏந்திய ஹிந்து அமைப்பினர் ; எச்சரித்து அனுப்பிய சி.ஐ.எஸ்.எப்.,

தாஜ்மஹாலில், கங்கை நீரை தெளித்து, காவிக் கொடியை ஹிந்து அமைப்பினர் ஏற்றியதால், பரபரப்பு ஏற்பட்டது.
உ.பி., மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு, ‘ஹிந்து ஜக்ரான் மன்ச்’ என்ற ஹிந்து அமைப்பின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் கவுரவ் தாகூர் வந்தார். கங்கை நீர்அவருடன், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மன்வேந்திர சிங் மற்றும் விஷ்வேஷும் உடன் வந்தனர். கிழக்கு வாயில் கதவு வழியாக நுழைந்த அவர்கள், பாட்டில் ஒன்றில், கங்கை நீரை நிரப்பி, அதை தாஜ்மஹாலுக்குள் தெளித்தபடி சென்றனர்.
இதன்பின், தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள பார்வையாளர் இருக்கை அருகே நின்று, காவிக்கொடியை துாக்கிக் காட்டினர். இந்த காட்சிகள் அடங்கிய, ‘வீடியோ’, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, அங்கிருந்த சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், அவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள், தாங்கள் இங்கு பூஜை செய்ய வந்ததாகவும் தெரிவித்தனர்.
ஒரு மணிநேரம் நடந்த விசாரணைக்குப் பின், சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள், அவர்களை எச்சரித்து அனுப்பினர். தாஜ்மஹாலில், வலதுசாரி அமைப்பினர், சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுவது, இது முதன்முறை அல்ல. கடந்த, 2008ல், தாஜ்மஹாலுக்குள், ஹிந்து மத சடங்குகளை, சிவசேனா கட்சியினர் செய்தனர். 2018ல், பெண்கள் சிலர், தாஜ்மஹாலில் உள்ள மசூதிக்குள் பூஜைகள் நடத்தினர்.