” ‘ஆளுநரின் ஆணைப்படி’ ; இதுகுறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்” – மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு இந்த அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘ஆளுநரின் ஆணைப்படி’ என்று வெளியிட்டிருப்பது வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.