10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : பள்ளிக் கல்வித்துறை மீண்டும் குழப்பம்

கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், வருகை பதிவேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழுந்தது.
அது குறித்து சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், காலாண்டு அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அந்த மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு குழப்பம் எழுந்துள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வுகளை எழுதாத மாணவர்களின் நிலை என்னவென்று கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி ஆப்சென்ட் போட்டால், எப்படி அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்ற குழப்பம் தற்போது எழுந்துள்ளது.