“அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் வெங்காயத்தின் விலை குறையும்!” தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தகவல்!!

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான்பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை குறையும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களுக்குள் வெங்காயத்தின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சிறிய வெங்காயத்தின் விலையும் குறுகிய காலத்திற்குள் உயர்ந்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் பெரிய வெங்காயத்தின் உற்பத்தி முறையே 25, 70 மற்றும் 15 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், தற்போதைய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் டிசம்பர் மத்தி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பயிரின் அறுவடையினால் விலை விரைவில் குறைய வாய்ப்புள்ளது. மத்திய அரசின் குறித்த நேரத்தில் எடுக்கப்பட்ட வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி தடை காரணமாக இந்த விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் அடுத்த 40 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய மொத்த இருப்பு 25 ஆயிரம் டன்களாகும். இது தமிழகத்தின் நாமக்கல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, தேனி, அரியலூர், பெரம்பலூர், துறையூர், மதுரை மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளிலிருந்து பெறப்படுகிறது.
மேலும், வெங்காய சாகுபடிக்கு பண்ணை இயந்திரங்களின் பங்கேற்பு சற்றும் இல்லாததால் பண்ணை தொழிலாளர்களையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த விலை உயர்வு என்பது வரும் டிசம்பர் இறுதிவரை நீடிக்கும். புதிய பயிரின் அறுவடைக்காலமாகிய ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விலை குறையும் என வர்த்தக மூலகங்கள் தெரிவிப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.