கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக 2-வது முறையாக இங்கிலாந்தில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு!!
அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்து நாட்டில் இரண்டாவது முறையாக ஒருமாத கால பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கத்தை அறிவித்தன.
இந்நிலையில் தொற்று பாதிப்பிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த இங்கிலாந்து நாட்டில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கிலாந்தில் இதுவரை 10 லட்சத்து 99 ஆயிரத்து 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தொடக்கத்தை அனுபவித்து வருவதாகவும், அவை தவிர்க்க முடியாதது என்றும் தேவை ஏற்பட்டால் இங்கிலாந்தில் மீண்டும் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் வியாழக்கிழமை முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரையிலான ஒருமாத கால பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். முதலில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் போலவே இரண்டாவது பொதுமுடக்கமும் தீவிரமாகப் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை, பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.