எழுத தவறிய மாணவர்களுக்கு இன்று நீட் தேர்வு!!!

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கடந்த மாதம் 13-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 97000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 13 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கலந்துகொள்ள முடியாத மற்றும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்காக தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை மறு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக மாணவர்கள் காலை 11 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் முறையை, இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரிய மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தி, அதன்பின் இளங்கலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை நடத்தக்கோரி, மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் அவர் முறையிட்டிருந்தார்.

நீட் தேர்வு வந்த பிறகு தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவு எட்டாகனியாகி விட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.