பிரதமர் அலுவலகத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா!

டெல்லி: தமிழகத்தை சேர்ந்தவரும், திறமையானவர் என்று திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு ஆட்சிகாலங்களிலும் புகழப்படுபவருமான, ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எத்தனை பதவிகளை அவர் வகித்து மக்களிடம் நற்பெயரை ஈட்டியிருந்தாலும், அமுதா ஐஏஎஸ் என்றதும், சமீப காலங்களாக நினைவுக்கு வருவது, அவர் முன்னாள் முதல்வர்களான, ஜெயலலிதா மற்றும், கருணாநிதி ஆகியோரின் இறுதிச் சடங்கின்போது செயல்பட்ட விதம்தான்.
இரு பெரும் தலைவர்களின் இறுதிச் சடங்கின் பொறுப்பும், அமுதாவிடம்தான் கொடுக்கப்பட்டிருந்தது. அத்தனை நேர்த்தியாக, பிரச்சினை இன்றி செய்து முடித்தார்.
அதிலும், கருணாநிதியின் இறுதிச் சடங்கு, மெரினா கடற்கரையில்தான் நடைபெறப் போகிறது என்பது இவருக்கு சுமார் 5 மணி நேரம் முன்பாகத்தான் சொல்லப்பட்டது.
ஏனெனில், நினைவிடம் தொடர்பான வழக்கு ஹைகோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது. அப்படியான கொந்தளிப்பு சூழலிலும், கருணாநிதி இறுதிச் சடங்கில், பல லட்சம் பேர் சேர்ந்த கூட்டத்திற்கு இடையே சிறப்பாக செய்து முடித்தார் அமுதா.

வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு, அங்கும் இங்கும் நடந்து அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து கொண்டிருந்ததை மீடியாக்களில் மக்கள் பார்த்து வியப்படைந்தனர். இறுதிச் சடங்கு முடிந்து, நல்லடக்கம் நடைபெற்றபோது, கருணாநிதி குடும்பத்தார் மட்டுமின்றி, அமுதாவும், மணலை எடுத்து போட்டு அனைவரது புருவத்தையும் உயரச் செய்தார்.

முன்னதாக, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இறுதிச் சடங்கு ஏற்பாட்டையும், இவர்தான் திறமையாக செய்திருந்தார். ராமேஸ்வரத்தில் நடந்த இந்த நிகழ்வில், பிரதமர் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகளின் ஆட்சி காலங்களிலும் நற்பெயரை ஈட்டிய அதிகாரி. மதுரையை சேர்ந்த அமுதா, தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி வழங்கி கவுரவித்துள்ளது.