காஞ்சிபுரத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ரவுடிகளால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை!!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய செய்தியாளர் ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் இசுரவேல் மோசஸ். மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு வீட்டில் இருந்த அவரிடம் தொலைப்பேசி எண் கேட்பது போன்று வெளியில் வரவழைத்தனர். அவர் வெளியே வந்ததும் அதே பகுதியைச் சேர்ந்த நவமணி என்ற ரவுடி அந்த மர்ம நபர்களுடன் சேர்ந்து மோசஸை அரிவாளால் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டினார்.
அதில் ரத்தக் காயங்களுடன் தப்பி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மோசஸ், அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறந்தார். இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நல்லூர் பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை காவல்துறையிடம் தெரிவித்த காரணத்தினால் ஏற்பட்ட முன்பகை காரணமாக நவமணி, விக்னேஷ், மனோஜ், ஆதி ஆகியோரால் செய்தியாளர் மோசஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக நவமணி தவிர்த்து மற்ற மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள நவமணியை தீவிரமாக தேடியும் வருகின்றனர்.