“பொதுமக்களும் இனி மின்சார ரயில்களில் பயணிக்கலாம்!” அறிவித்தது தெற்கு ரயில்வே!!!

தமிழகத்தில் பொதுமக்களும் இனி மின்சார ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதோடு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல சில சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு மின்சார ரயில்களில் அவர்கள் மட்டும் ரயில் சேவையை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களின் ஊழியர்களும் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.
நாள்தோறும் 150 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 54 ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் மற்றும் விமான நிலையம் செல்ல வேண்டிய பயணிகள் இந்த சிறப்பு மின்சார ரயில்களை இனி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் ஆர்.தனஞ்செயலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் அரசு மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் நிறுவனத்திடன் இருந்து கடிதம் பெற்றுக் கொண்டு சிறப்பு மின்சார ரயில்களில் பயணிக்கலாம்.
விமானம் மூலம் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பொதுமக்கள், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் செல்லும் பயணிகள் பயண தேதியில் மின்சார ரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிகளின் எண்ணிக்கையை பொருத்து ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.