உலகத்தில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது..!!
![](https://thambattam.com/storage/2020/11/7669-longdom-780x470.jpg)
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகம் கூறும்போது, “ கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் கரோனாவால் 6,57,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5.4 கோடியாக உள்ளது. கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
உலக முழுவதும் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 13,09,713 ஆக உள்ளது. கரோனா உயிர் இழப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.