“வேறுநபரோடு குடும்பம் நடத்தும் என் மனைவியை மீட்டுத் தாருங்கள்” கண்ணீருடன் கணவர் புகார்!!

தன்னைவிட்டு பிரிந்த, வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் தன் மனைவியையும் குழந்தைகளையும் மீட்டுத் தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சாமி என்பவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப்பின் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சாமி வருமானம் ஈட்டுவதற்காக வெளிநாடு சென்றுள்ளார். வருடம் வருடம் விடுமுறைக்கு சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு வருகை தரும் சாமி தன் மனைவியுடன் அங்கு வசித்துள்ளார்.
இதனிடையே மனைவி ராஜேஸ்வரிக்கு புதுக்கோட்டையில் அரசு வேலை கிடைத்துள்ளது. அரசு வேலை கிடைத்ததையடுத்து ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளுடன் கணவர் சாமி புதுக்கோட்டையில் வாடகை வீடு எடுத்து அவர்களை குடியமர்த்தி விட்டு பணி காரணமாக மீண்டும் மலேசியா சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சாமி மலேசியாவில் சம்பாதித்த பணம் மற்றும் நகை அனைத்தையுமே தன் மனைவி பேருக்கு மாதம் மாதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை பார்த்துவந்த சாமியின் மனைவி ராஜேஸ்வரிக்கு பதவி உயர்வு கிடைத்து தற்பொழுது குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கும் புதுக்கோட்டையில் அவர் வீடு அருகே குடியிருந்து வரும் தாஸ் என்ற நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சொந்த ஊருக்கு திரும்பிய கணவர் சாமி நிலையில், தாஸ் உடன் அவரது மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்தது அவருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. சேர்ந்து வாழ அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து சாமி இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “12 வருடங்களாக சம்பாதித்த பணம் மற்றும் நகையை அபகரித்து தாஸ் என்பவர் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் என் மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். என் மனைவி மற்றும் குழந்தைகளையும் நகை மற்றும் பணத்தை மீட்டுத் தரவேண்டும்” என்று சாமி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். சாமி கொடுத்த புகார் மனுவையடுத்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.