இதே நாளில் 12 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் கொடூர தாக்குதல் நடத்தி 166 உயிர்களை பறித்த பயங்கரவாதிகள்!!

மும்பையில் இதே நாளில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது.
நவம்பர் 26/11… இந்த நாள் அவ்வளவு சீக்கிரம் இந்தியர்களின் நினைவிலிருந்து மறைந்து விடாது. நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக ஊடுருவி 3 நாட்கள் நடத்திய மிருகத்தனமான தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமே அதிர்ச்சியில் உறைந்து ஸ்தம்பித்து போனது.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கொலைவெறி உணர்வுடனும், கொடிய ஆயுதங்களுடன் கராச்சியில் இருந்து இந்தியாவை நோக்கிய பயணத்தை தொடங்கினர். அவர்கள் வரும் வழியில் மீன்பிடி படகில் இருந்தவர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று அதே படகில் மும்பைக்கு வந்து சேர்ந்தனர்.

பின் குழுக்களாக பிரிந்து மும்பையின் அடையாளமாக விளங்கும் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், தாஜ் ஓட்டல், லியோபோல்டு கபே, காமா ஆஸ்பத்திரி, நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினர்.
இதில் பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் அபு இஸ்மாயில் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது. 15 நிமிடங்களில் அவர்கள் 58 பேரை கொன்று குவித்து சென்ற இடங்களையெல்லாம் ரத்த சகதியாக்கினர். இங்கு நடத்திய தாக்குதலில் 104 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல லியோபோல்டு கபேயில் 11 பேரும், டிரிடென்ட் ஓட்டலில் 30 பேரும், தாஜ் ஓட்டலில் 31 பேரும், நரிமன் ஹவுசில் 7 பேரும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 166 பேர் மாண்டனர். மேலும் 320-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

போலீஸ் வாகனத்தை கடத்தி சென்ற பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை மட்டும் போலீசார் உயிருடன் பிடித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஒம்லே தனது உயிரை கொடுத்து அஜ்மல் கசாப்பை உயிரோடு பிடிக்க உதவினார். மற்ற அனைத்து பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர்.
இதேபோல அஜ்மல் கசாப்பும் கடந்த 2012-ம் ஆண்டு புனே எரவாடா ஜெயிலில் தூக்கிலிடப்பட்டான். சமீபத்தில் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்திற்கு சமீபத்தில் வேறு ஒரு வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

இன்று நினைவஞ்சலி செலுத்தும் அதே வேளையில், மக்களை காக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், தீவிரவாதிகளை எதிர்த்து போராடி உயிர்நீத்த ஒவ்வொரு காவல் வீரர்களையும் நினைத்து நாடே பெருமைக் கொள்கிறது.