தொடரும் விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்டம்.. காவல்துறையின் ‘சிறை’ கோரிக்கையை நிராகரித்த கெஜ்ரிவால்!!

டெல்லியை நோக்கிய விவசாயிகளின் பேரணியைத் தொடர்ந்து 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாகப் பயன்படுத்த அனுமதி கோரிய தில்லி காவல்துறையின் கோரிக்கையை மாநில அரசு நிராகரித்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகா் டெல்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளதால், டெல்லி மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

டெல்லியை ஹரியாணாவுடன் இணைக்கும் எல்லைப் பகுதியில் திரண்ட விவசாயிகள் மீது தில்லி காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். தொடர்ந்து டெல்லியின் எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி அவர்கள் உள்ளே நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளின் பேரணியையொட்டி டெல்லி எல்லையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பேரணியைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வரும் டெல்லி காவல்துறை தில்லியில் உள்ள 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாகப் பயன்படுத்த மாநில அரசிடம் அனுமதி கோரியது. விவசாயிகளின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு 9 மைதானங்களை தற்காலிக சிறைகளாக மாற்ற அனுமதி கோரிய டெல்லி காவல்துறையின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்தது.

முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் விவசாயிகள் பேரணியைத் தடுக்க கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x