ம.பி.யில், தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபர் குத்திக் கொலை!!

சிகிரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டதற்கு தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை இரண்டு பேர் குத்திக்கொலை செய்துள்ளனர்.
மத்தியபிரதேசத்தில் சிகிரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டதற்கு தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக அம்மாநில போலீசார் அதிகாரி கூறியதாவது:-
மத்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டம் கரோக் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாஷ் மற்றும் அங்கேஷ். நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று தங்கள் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் சிகிரெட் வாங்கியுள்ளனர்.
சிகிரெட்டை வாங்கிக்கொண்டு வந்தவர்கள் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லால்ஜீ ராம் என்ற நபரிடம் சிகிரெட்டை பற்றவைக்க தீப்பெட்டி கொடுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு லால்ஜீ ராம் தன்னிடம் தீப்பெட்டி இல்லை என கூறியுள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த யாஷ் மற்றும் அங்கேஷ் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு லால்ஜீ ராமின் தலையில் சரமாரியாக குத்தியுள்ளனர். இந்த கத்தி குத்து தாக்குதலில் லால்ஜீ ராம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
படுகாயமடைந்த லால்ஜீ ராமை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குணா மாவட்ட போலீசார் தீப்பெட்டி இல்லை என்று கூறிய லால்ஜீ ராமை கத்தியால் குத்தி கொலை செய்த யாஷ் மற்றும் அங்கேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.