மின் துறை அமைச்சர் ஊரிலேயே மின் கம்பி அறுந்தது ; மாணவி கை துண்டானது!!

மின் துறை அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கலில், மின் கம்பி அறுந்து விழுந்ததில் கல்லூரி இறுதியாண்டு மாணவி ஒருவரின் கை துண்டானது. மற்றொரு கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் டி.வி.எஸ். மேடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். விசைத்தறி தொழிலாளி. இவருக்கு 21 வயதில் ஹேமா என்ற மகளும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஹேமா தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் தீபாவளியன்று ஹேமா தனது பாட்டி வீடான ஆண்டிக்காடுக்கு சென்றுள்ளார்.
அங்கு மாடியில் நின்று கொண்டிருந்த போது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து மாணவி ஹேமா மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தூக்கியடிக்கப்பட்டார் மாணவி. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆவாரங்காட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கும் சரியான சிகிச்சை வசதி கிடைக்காததால் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ரூ.7 லட்சத்துக்கும் மேல் செலவு செய்தும் மாணவியின் கையை காப்பாற்ற முடியவில்லை. அழுக தொடங்கியதால் உடலுக்கு பாதிப்பு பரவாமல் இருக்க இடது கையை அகற்றியுள்ளனர்.
2 வாரத்துக்கு முன்பு இச்சம்பவம் நடந்த நிலையிலும் ஊடகங்களில் இது பதிவாகவில்லை. சமீபத்தில் பா.ஜ.க., மாவட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரைச் சந்தித்து ரூ.25 ஆயிரம் உதவித்தொகை அளித்த பிறகே இவ்விஷயம் வெளியே தெரிந்துள்ளது. எதனால் மின் கம்பி அறுந்து விழுந்தது என இதுவரை மின்வாரியம் விளக்கம் அளிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் போனில் அழைத்து ஆறுதல் கூறினார். மாணவிக்கு முடிந்த உதவிகள் செய்வதாக உறுதியளித்துள்ளார். மாணவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது தான் அவரது எதிர்காலம் குறித்த கவலையின்றி இருக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.