“நாளை நடத்த உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது” – நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழக பா.ஜ., சார்பில் நாளை (நவ.,6) நடத்த உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தமிழக பாஜ., சார்பில் திருத்தணி துவங்கி திருச்செந்தூர் வரை நாளை முதல் டிச.,6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அறிவித்துள்ளார். இதற்கு தடை கோரி செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

மனுக்களில் ‘வைரஸ் தொற்று காரணமாக மத நிகழ்ச்சிகள் பல ரத்து செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தும் போது பொது மக்கள் அதிகம் பேர் கூடுவர். அதனால் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு எடுத்து வரும் முயற்சிகளும் வீணாகும்’ என கூறப்பட்டிருந்தது.

வேல் யாத்திரைக்கு தடைக்கோரும் இம்மனுக்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வில் இன்று (நவ.,5) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடுகையில், ‘வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு திருவள்ளூரில் அளிக்கப்பட்ட மனுவில் எத்தனை பேர் பங்கேற்பர் என குறிப்பிடவில்லை. மேலும், கொரோனாவுக்கான 2, 3வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல்யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது,’ என பதிலளித்துள்ளார். இதனையடுத்து வேல் யாத்திரைக்கு காவல்துறையும் அனுமதி மறுத்துள்ளது.

இதற்கு பாஜ., தரப்பில் பதிலளிக்கையில், ‘பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் வேல் யாத்திரையை தடுப்பது சரியல்ல. கொரோனா தொற்று குறைந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேல் யாத்திரையின் போது எந்த பகுதியிலும் தங்கும் திட்டமில்லை. குறிப்பிட்ட எந்த பகுதியும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கவில்லை. மேலும், தனிமனித இடைவெளியை பின்பற்றவே மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.’ என விளக்கமளித்தது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x