மஹாராஷ்டிராவில் தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் 23 லட்சம் ரூபாய்க்கு ஏலம் ..

நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிமுக்கு சொந்த மாக, மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, ஆறு சொத்துக்கள், 23 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன.
நிழலுலக தாதாவாக செயல்பட்ட, தாவூத் இப்ராஹிம் மீது, மும்பை தொடர் குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் தற்போது, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பதுங்கி உள்ளார். அவரை ஒப்படைக்கும்படி, மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், பாக்., அரசு அதை ஏற்கவில்லை.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டம், மும்பாதே கிராமத்தில் உள்ள, தாவூத்தின் வீடுகள் உட்பட ஆறு சொத்துக்களை ஏலம் விடுவதற்கு, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.
அதன்படி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில், நேற்று ஏலம் விடப்பட்டது. முன்னதாக, இந்த சொத்துக்களை நேரில் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தாவூத்தின் ஆறு சொத்துக்களில், நான்கை, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் புபேந்திர பரத்வாஜ் ஏலம் எடுத்தார். மற்றொரு வழக்கறிஞர் அஜய் ஸ்ரீவத்சவா, மற்ற இரண்டு சொத்துக்களை ஏலம் எடுத்தார். மொத்தம், 23 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த சொத்துக்களை, தாவூத்தின் உறவினரான, இஸ்மாயில் கஸ்கார் பராமரித்து வந்தார்.
அவர் கூறியதாவது: இந்த சொத்துக்கள் அனைத்தும், தாவூத்தின் தாய் அமீனா கஸ்கர் பெயரில் உள்ளது. அவருக்கு, தாவூத் உட்பட, 13 குழந்தைகள் உள்ளனர். அதில் சிலர் இறந்துவிட்டனர். இந்த சொத்துக்களில் உயிருடன் உள்ள மற்றவர்களுக்கும் உரிமை உள்ளது. தாவூத்தின் சொத்து என அறிவித்து, அவற்றை எப்படி ஏலம் விட முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.