அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? – லாவணி பாடும் ஓ.பி.எஸ்.,

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ்ஸா அல்லது ஈ.பி.எஸ்ஸா என்ற விவாதம் காரசாரமாக நடைபெறும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என லாவணி பாடியுள்ளார் ஓ.பி.எஸ்.,
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய 8 மாதங்கள் உள்ள நிலையில் அதிமுகவில் இப்பொழுதே பங்காளி சண்டைகள் தலை தூக்கியிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு பிறகு ஓ.பி.எஸ்ஸிடம் வந்த முதல்வர் பதவி அவரிமிருந்து சசிகலா மூலம் பழனிசாமிக்கு கிட்டியது. இதனை கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா அறிவித்த போது, மோடி குழந்தை ராமர் கோயிலில் கும்புற விழுந்து வணங்கியது போல், சசிகலா காலை நோக்கி விழுந்தார் பழனிசாமி.
அதன் பின் சசிகலா சிறைக்கு சென்றுவிட தினகரன் முதல்வர் பதவிக்கு குறி வைத்தார். இதனால் மத்திய பா.ஜ.க அரசின் துணையுடன் அவரை ஓரங்கட்டிவிட்டு முழு அதிகாரத்தையும் ஈ.பி.எஸ்ஸே இதுவரை அனுபவித்து வந்தார். இந்நிலையில் வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. ராஜேந்திர பாலாஜி நேரடியாக பழனிசாமி என்றார். உதயகுமாரும் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றார்.

இந்த உதயகுமார் யார் என்றால் ஒ.பி.எஸ்., முதல்வராகவும், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த போது கட்சியும், ஆட்சியும் ஒரே நபரிடம், அதாவது சசிகலாவிடமே இருக்க வேண்டும் என கூறியவர். இப்போது நிறத்தை மாற்றிக்கொண்டு பழனிசாமிக்கு காவடி தூக்குகிறார். ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, கே.பி.முனுசாமி போன்றவர்கள் மழுப்பலான பதில்களையே கூறினார்கள்.
பழனிசாமி காபந்து முதல்வரான பின்பு தான் அதிமுகவில் விரிசல் விழும் என அரசியல் நோக்கர்கள் கருதினர். ஆனால் அதற்கு முன்பாகவே விரிசல் விழ ஆரம்பித்திருப்பதை இந்த விவாதங்கள் காட்டுகிறது.

இந்நிலையில் “தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” என்று ஓ.பி.எஸ் டுவீட் செய்துள்ளார். இருந்தாலும் முதல்வராக இருந்து துணை முதல்வராகிவிட்டவருக்கு உள்ளுக்குள் அதிருப்தி இருக்கவே செய்யும்.