யாரும் என்னை விலைக்கு வாங்க முடியாது – அசாதுதீன் ஒவைசி பதிலடி

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு (2021) சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, “ஹைதராபாத்திலிருந்து ஒரு கட்சியை மேற்கு வங்கத்தில் போட்டியிட வைக்க பாஜக முயல்கிறது. மேற்கு வங்கத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குகளைப் பிரிக்க முயல்கிறார்கள். 

இதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த கட்சிக்கு பாஜக கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளது. அசாதுதீன் ஒவைசி பாஜகவின் பி டீம். பணம் பெற்றுக்கொண்டு வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கிறார்” என்று கூறினார். 

இந்நிலையில் யாரும் என்னை விலைக்கு வாங்க முடியாது என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இன்றைய தேதிவரை பணத்தால் ஒவைசியை வாங்குவதற்கு யாரும் இல்லை. மம்தாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவர் மன அமைதியின்றி இருக்கிறார். மம்தாவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் பா.ஜனதா பக்கம் சேரும்போது அவர் அதை நினைத்து வருத்தப்பட வேண்டும். பீகார் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். ஆனால், பீகார் மக்களைத் தரக்குறைவாகப் பேசியதற்கு மம்தா மன்னிப்பு கோர வேண்டும். 

இப்போதுவரை நீங்கள் உங்களுக்குக் கட்டுப்பட்ட மிர் ஜாபர், சாதிக்கை மட்டும்தான் கவனித்து வந்தீர்கள். முஸ்லிம்களுக்காகப் பேசும், சிந்திக்கும் முஸ்லிம்களை நீங்கள் விரும்பமாட்டீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மம்தா பானர்ஜி இருந்தபோது, அவரும் பாஜகவைப் புகழ்ந்து பேசியுள்ளார் என்பதை மறந்துவிட்டுப் பேசக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x