மின்வாரியம் தனியார் மயமாக்கப்படாது ; அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்

மின்வாரியம் எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயமாக்கப்படாது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.  

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களுக்கு தனியார் மூலம் பணியமர்த்த உத்தரவிட்டுள்ள மின்சாரத் துறை, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. மின்வாரிய தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் உதவியாளர் மற்றும் வயர்மேன் பணியிடங்களில் 20 பேரை தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் நான்கு ஆண்டுகள் வரை அனுமதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியமாக 12,360 ரூபாயும், ஆண்டுக்கு 5 விழுக்காடு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மூலம் பணியமர்த்தும் அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் மின்வாரியம் எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயமாக்கப்படாது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்சார பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஓப்பந்த தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்களே தவிர, தனியார்மயமாக்கவில்லை என்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்றும் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x