தொழில் நடத்த ஏற்ற மாநிலங்கள் – டாப் 10-ல் தமிழகம் இடம்பெறவில்லை!

இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்கி நடத்த ஏற்ற மாநிலங்களை மத்திய அரசு தரவரிசைப்படுத்தியுள்ளது. இதில் முதலிடத்தில் ஆந்திரா உள்ளது. டாப் 10–ல் தமிழகம் இடம்பெறவில்லை.
மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டத்தின் படி, ஆண்டுதோறும் அனைத்து மாநில தொழில் வளர்ச்சியையும் அளவிட்டு மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் தரவரிசை வெளியிடுகிறது. மார்ச் மாதமே வெளியாக வேண்டிய 2019-ம் ஆண்டுக்கான தரவரிசை, கொரோனாவால் தள்ளிப்போய் சனியன்று வெளியாகியிருக்கிறது.
கட்டுமான அனுமதி, தொழிலாளர் ஒழுங்குமுறை, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்களை அணுகுதல், நிலம் கிடைக்கும் தன்மை மற்றும் ஒற்றை சாளர அமைப்பு போன்ற அளவீடுகளை கொண்டு இந்த தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. 2019 நிதியாண்டிலும் ஆந்திராவே முதலிடம் பெற்றுள்ளது. 12-ம் இடத்தில் இருந்த உ.பி பல இடங்கள் முன்னேறி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இவை தவிர டாப் 10 பட்டியலில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், குஜராத் ஆகியவை உள்ளன. இதில் தமிழகம் இடம்பெறவில்லை. 14-வது இடத்தில் தமிழகம் உள்ளது.
இத்தனைக்கும் கடந்த ஆண்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சில கோடிகள் செலவு செய்து அமெரிக்கா, துபாய், லண்டன் சுற்றுப்பயணம் சென்று வந்தனர். ஆனாலும் தரவரிசையில் எந்த முன்னேற்றமும் இல்லை.