மன்னர் குடும்பத்துக்கே பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம்! உச்சநீதிமன்றம தீர்ப்பு
பத்மநாப சுவாமி கோயில் மீது மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்த கோயிலின் ரகசிய அறைகளில் இருந்து, 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, இந்த திருக்கோயில் உலக அளவில் கவனம் பெற்றது.
பத்மநாபசுவாமி திருக்கோயிலின் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்து நிர்வகிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் கடந்த 2011ல் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதில், “திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு செல்கிறது. கோயிலில் பூஜை செய்ய தந்திரியை மன்னர் குடும்பமே நியமிக்கலாம். கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட இடைக்கால குழு அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. இந்த குழு, திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். குழுவில் இடம்பெறும் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.