காதலி பேசவில்லை.. கோபத்தில் ரோட்டோரம் படுத்திருந்த தொழிலாளி எரித்துக் கொலை!!

நாகர்கோவில் அருகே இருளப்பபுரத்தை சேர்ந்த சந்திரன் 29, எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட மதுரையை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர்.
சந்திரனுக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப தகராறால் குடும்பத்தை பிரிந்தவர் கூலி வேலை செய்து ஓட்டலில் சாப்பிட்டு கடை, வீடு முன்பு படுத்து துாங்குவார். டிச.,20 இரவு இருளப்பபுரத்தில் உள்ள ஒரு வீட்டு முன்பு எரிந்த நிலையில் சந்திரன் இறந்து கிடந்தார். சி.சி.டி.வி., கேமரா பதிவு அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.
அதனடிப்படையில் மதுரை இ.பி. காலனி பாலாஜி 20, மதுரை சொக்கிகுளம் அண்ணாநகர் இலங்கேஸ்வரன் என்ற இளங்கோ 19, லட்சுமணன் 20, பொன்ராஜ் 22, 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர். பாலாஜி போலீசில் கொடுத்த வாக்குமூலம்:
நாங்கள் நாகர்கோவிலில் பிளாஸ்டிக் கம்பெனியில் நான்கு நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தோம். நான் எனது சொந்த ஊரில் ஒரு பெண்ணை காதலித்தேன். சம்பவத்தன்று போனில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அவரிடம் பேசக்கூடாது என்று கூறினார். இந்த கோபத்தில் நாங்கள் மது அருந்தினோம். வரும் வழியில் மின் விளக்குகளை உடைத்தேன்.
ரோட்டோரம் படுத்திருந்த சந்திரனிடம் தீப்பெட்டி இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்று சொன்னதால் அவரை தாக்கி தீ வைத்து எரித்துக் கொன்றோம். இவ்வாறு கூறியுள்ளார்.