கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை!!

‘எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க மாட்டோம்’ என டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிந்றனர். நேற்று முன்தினம் நடந்த ஆறாவது சுற்று பேச்சில் மின்சார கட்டணம் மற்றும் வைக்கோல் எரிப்பதற்கு அபராதம் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக வரும் 4ல் ஏழாவது சுற்று பேச்சு நடக்க உள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: இரண்டு பிரச்னைகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவை இதுவரை சட்டமாகவில்லை. அவற்றால் ஏற்படும் பிரச்னைகளை நாங்கள் இதுவரை எதிர்கொள்ளவில்லை. அதே நேரத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அவற்றை ரத்து செய்ய வேண்டும்.
அதேபோல் குறைந்த பட்ச ஆதார விலை முறை தொடருவதை உறுதி செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டோம். போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.