தொற்றுநோய் மூத்த விஞ்ஞானி ககன்தீப் திடீர் ராஜினாமா

கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில், ஈடுபட்டு வந்த மூத்த விஞ்ஞானியான டாக்டர் ககன்தீப் காங், தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் ககன்தீப் காங், இந்தியாவின் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளுள் ஒருவர். ரோட்டோவைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பில் இவரது பங்கு அளப்பரியது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரிதொழில்நுட்பத்துறையின் கண்காணிப்பில் உள்ள Translational Health Sciences and Technology Institute (THSTI) அமைப்பின் நிர்வாக இயக்குனர் பதவி வகித்து வந்த நிலையில், டாக்டர் காங், திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
தனது சொந்த காரணங்களுக்காகவே, நிர்வாக இயக்குனர் பதவியை, ராஜினாமா செய்துள்ளதாக டாக்டர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார். எனினும், இதற்கு பின்னணியில் வெளிநாட்டு அரசியல் அழுத்தங்கள் உள்ளனவா என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில், டாக்டர் காங், சமீபகாலமாக மும்முரமாக ஈடுபட்டு வந்தார். கொரோனா தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக டாக்டர் காங் தலைமையில், சமீபத்தில் தான் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென இவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது
“நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், எனது தலைமையிலான குழு கலைக்கப்பட்டு விட்டது. இம்மாதம் இறுதியில் இங்கிருந்து வெளியேறிவிடுவேன். எனது வீடு வேலூரில் இருப்பதால், விரைவில் அங்கு செல்ல உள்ளேன்.” என்று ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.