‘சீன அதிபருடன் பேச விருப்பமில்லை’ முகத்தை திருப்பிக்கொண்ட அமெரிக்க அதிபர்

‘கொரோனா வைரசை கட்டவிழ்த்துவிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் நான் பேச விரும்பவில்லை’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவை விமர்சித்து வருகிறார். சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியதாக டிரம்ப் சொல்லி வருகிறார். இது தொடர்பாக அமெரிக்கக் குழு, வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால், இதைச் சீனா மறுத்துவிட்டது. வர்த்தக ரீதியாகவும் சீனா – அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் மாறி மாறி வரி விதிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் இன்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், சீனா குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது:
‘சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் நான் பேச விரும்பவில்லை. சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை. வைரசை மறைத்து அதை உலகிற்கு கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதில் சீனாவுக்கு முழுப் பொறுப்பு உள்ளது. இதை அவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாம். அவர்கள் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள், அதைச் செய்யவில்லை. உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாகத்தான் இருந்திருக்கிறது.’என்று டிரம்ப் கோபமாக பதிலளித்தார்.