இரண்டரை வயது பெண் குழந்தை கொலை வழக்கு.. இளைஞருக்கு மரண தண்டனை

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ளது கவிநகர். இப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. கடந்த அக்டோபர் 18-ம் தேதி வீட்டின்அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனது. இதுதொடர்பாக கவிநகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அடுத்த நாள் அக்டோபர் 19-ம்தேதி பிற்பகல், கவிநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள புதர்ஒன்றில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில், பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அதன்பின், குழந்தையின் உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், குழந்தையின் தந்தையுடைய நண்பர் சந்தன் (32) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிரவிசாரணை நடத்தியதில், உண்மையை சந்தன் ஒப்புக் கொண்டார்.
போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீஸார் கைது செய்தனர். காஸியாபாத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, சந்தனை குற்றவாளி என நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரத்தை, நீதிபதி மகேந்திர வத்சவா நேற்று வாசித்தார். அதில், இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் கொடுமை செய்து கொலை செய்த குற்றத்துக்காக சந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
போக்சோ நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட 29 நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.