மீண்டும் உயரும் வெங்காய விலை..?

ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், வெங்காய விலை மீண்டும் மார்க்கெட்டில் அதிகரித்துவருகிறது.
மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்தாண்டு பெய்த மழையால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, வெங்காய விலை கிடுகிடுவென, கிலோ, 120 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. வெங்காய இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து, வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு, கிலோ, 100 ரூபாய் வரை விற்கப்பட்டது.

கூட்டுறவு மற்றும் தோட்டக்கலைத் துறை வாயிலாக, மானிய விலையில், சென்னையில், 50 ரூபாய்க்கு வெங்காய விற்பனை நடந்தது. இந்நிலையில், வெங்காய அறுவடை, 2020 நவ., முதல் துவங்கி, நடந்து வருகிறது. இதனால், டிசம்பரில், 1 கிலோ பெரிய வெங்காயம், 25 முதல், 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கிடங்குகளில் இருந்து, மீண்டும் அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேஷியாவிற்கும், வெங்காய ஏற்றுமதி துவங்கி உள்ளது. இதன் காரணமாக, வெங்காய விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.

தற்போது, சென்னை உட்பட தமிழகம் முழுதும், 1 கிலோ வெங்காயம், 40 முதல், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை இன்னும் உயரக்கூடும் என்கின்றனர் வியாபாரிகள். மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்காத நிலையில், எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது என, பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய – மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x