19 போர் விமானங்களை அனுப்பி அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!!

தைவானில் அமெரிக்க உயர்நிலை குழு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், சீனா தன்னுடைய 19 போர் விமானங்களை அந்நாட்டுக்குள் அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனா, தைவான் தனக்கே சொந்தம் என்று உரிமை கோரி வருகிறது. சீனாவின் இந்த திமிரை அடக்குவதற்காக, தைவானுக்குத் தேவையான இராணுவ உதவிகள், ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும், சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து தைவானை பாதுகாத்தும் வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக டிரம்ப் நிர்வாகம் தைவானுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் சுகாதாரச் செயலரான அலெக்ஸ் அசார் தைவானுக்குச் சென்றார்.
இதையடுத்து மீண்டும் டிரம்ப் அமைச்சரவையை சேர்ந்த வெளியுறவு துணை அமைச்சரான கெய்த் க்ரச் தலைமையிலான உயர்நிலை குழு தைவான் சென்றுள்ளது. இந்த குழு கடந்த 2 நாட்களாக அங்கு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், ஆத்திரம் அடைந்துள்ள சீனா, தைவான் வான் எல்லைக்குள் நேற்று முன்தினம் 18 போர் விமானங்களை அனுப்பி எச்சரிக்கை விடுத்தது.
இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் 18 சீன போர் விமானங்கள் தைவான் எல்லையில் பறந்தன. அவற்றில் இரண்டு விமானங்கள் வெடிகுண்டு வீசுபவை என்று குறிப்பிட்டிருந்தது. நேற்றும் 2-வது நாளாக 19 போர் விமானங்களை தைவான் நாட்டு வான் எல்லைக்குள் பறக்கவிட்டு, சீனா தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது. இது, தைவானை மிரட்டும் வகயைிலும், அமெரிக்காவை எச்சரிக்கை செய்யும் வகையிலும் இருந்தாக தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல், டிக் டாக் ஆப்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. தென் சீன கடல் முதல் தனது அண்டை நாடுகள் அனைத்திலும் எல்லை போரில் ஈடுபட்டு, உலகளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முயல்கிறது. உலகின் காவல்காரன் என்று கருதப்படும் அமெரிக்காவுக்கு இது ஆத்திரத்தை அளித்துள்ளதால், சீனா மிரட்டும் நாடுகளுக்கு எல்லாம் தனது குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி தன்பக்கம் இழுத்து வருவது குறிப்பிடத்தக்கது.