“ஹாத்ரஸ் பெண்ணிற்கு தேவை நீதிதானே தவிர, அவதூறு அல்ல” – பிரியங்கா காந்தி

ஹாத்ரஸ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி அவதூறு ஏற்படுத்துவது பிற்போக்குத்தனம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதியை பெற்றுத்தராமல், இளம்பெண் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு சுமத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பாஜக அரசு அவதூறு சுமத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, ஒரு பெண்ணின் தன்மையை இழிவுபடுத்தும் ஒரு கதையை உருவாக்குவதும், அவளுக்கு எதிரான குற்றங்களுக்கு அவளை எப்படியாவது பொறுப்பேற்க வைப்பதும் பிற்போக்குத்தனமான செயல். ஹாத்ரஸில் கொடூரமான வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இளம்பெண்ணின் குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல், அவரது உடல் காவல்துறையினரால் எரிக்கப்பட்டுள்ளது. அவளுக்குத் தேவையானது நீதிதானே தவிர அவதூறு அல்ல” என்று பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.