சோனியாவை விமர்சித்த பாஜக நிர்வாகி – கொதித்த குஷ்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் நிர்மல் குமார் விமர்சித்திருந்தார், அதற்குப் பாஜகவில் இருக்கும் குஷ்புவே கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாட்கள் பயணம் மேற்கொண்டு கொங்கு மண்டலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நாக்பூரில் இருக்கும் டவுசர்வாலாக்களால் தமிழகத்தில் காலூன்ற முடியாது, தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மறைமுகமாகச் சாடியிருந்தார்.
இதற்குப் பாஜக தமிழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல் குமார், ‘இத்தாலியைச் சேர்ந்த சோனியா இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்ய முயற்சி செய்யும்போது எங்களுக்குத் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் உரிமை உள்ளது’ என்று தெரிவித்ததோடு, சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த குஷ்பு, சமூக வலைத்தளங்களில் சோனியா பற்றிய கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் பெண்களை அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சிப்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்த பாஜக தரப்பினர் சோனியா காந்தி கல்லூரியில் படிக்கும்போது செய்த பணி பற்றியே கூறப்பட்டுள்ளது என்றும் அவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும் எனவே பதிவைத் திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் குஷ்புவுக்கு பதில் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.