விவசாயிகள் மீது தாக்குதல்.. பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் யின் சதி காரணம்??

சிங்கு எல்லை பகுதியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாரதிய ஜனதா கட்சியினரின் தூண்டுதலே காரணம் என்று போராடும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லைகளான சிங்கு, காஜிபூர், திக்ரியில் பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கு எல்லை பகுதியில் போராடி வரும் விவசாயிகள் மீது நேற்று முன்தினம் உள்ளூர் வாசிகள் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. அப்போது கூட்டத்தை கலைப்பதாக கூறி டெல்லி போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர்.
இதன் பின்னணியில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சதி இருப்பதாக தேசிய கிசான் சங்கம் குற்றம் சாடியது. வன்முறை மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாகவும், அவர்கள் புகார் கூறியுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக, குண்டர்களும், டெல்லி போலீசாரும் இணைந்து விவசாயிகளை தாக்கியதாக அக்கட்சி குற்றம் சாடியது. விவசாயிகளை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு பஞ்சாப் மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.