மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை அறிவிப்பு.. அரசியல் தலைவர்கள் சிறைவைப்பு
மியான்மரில் ஆட்சியை கைபற்றியுள்ள அந்நாட்டு ராணுவம் ஓராண்டுக்கு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சாங் சூச்சி பொறுப்பேற்றார்.
ராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். சூச்சிக்கு இருந்த ஜனநாயகப் பிம்பமானது இதன் மூலம் சிதைந்தது.
இந்தநிலையில் கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி பெற்றது.
இந்தநிலையில் ஆங் சான் சூச்சி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஓராண்டுக்கு நெருக்கடிநிலை அமலில் இருக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தகவல் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினரால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் நிர்வாகம் முழுமையாக ராணுவம் வசம் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தேர்தல் முடிவுகளை மாற்றும் எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது அமெரிக்கா கூறியுள்ளது.
இதுபோலவே பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.