போதையில் சில்மிஷம்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி உதை

கெங்கவல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், பீடா கடை நடத்தி வருகிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட தால், நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது பணம் தேவைப்பட்டதால், தனது 17 வயது மகளை உறவினர் ஒருவருடன் பணம் எடுக்க கடைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கெங்கவல்லி யூனியன் அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருத்தபோது, தமிழ் புலிகள் இயக்க பொறுப்பாளரான தங்கமணி மகன் வெங்கடேஷ் (32) என்பவர் குடிபோதையில் அங்கு வந்தார். திடீரென, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அவ்வழியாக வந்த ராமு (எ) மணிகண்டன் தட்டிகேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த மணி கண்டன் மயங்கி சரிந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்த தகவலின் பேரில், எஸ்ஐ முருகேசன், விரைந்து சென்று வெங்கடேஷை விசாரணைக்காக அழைத்துச் சென்றார். பின்னர், தகாத வார்த்தைகளால் திட்டியது, கையால் தாக்கியது, கட்டையால் தாக்கியது மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து வெங்கடேஷை கைது செய்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு வெங்கடஷின் உறவினர் ஒருவர், வழக்கினை வாபஸ் பெறக்கோரி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.