சமூக வலைதளம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவியை கடத்தி கற்பழிப்பு.. 7 வாலிபர்கள் கைது

கேரளாவில் சமூக வலைதளம் மூலம் பழகிய பிளஸ்-1 மாணவியை கடத்தி கற்பழித்தது தொடர்பாக 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கினார். அதன்மூலம் அவருக்கு பல வாலிபர்கள் நண்பர்களானார்கள்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி இரவில் திடீரென மாணவி காணாமல் போனார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மாணவி மாயமானது குறித்து புயம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்தநிலையில் மாணவி வீடு திரும்பினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை வாலிபர்கள் சிலர் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் ஹிரிடே(வயது19) என்ற வாலிபர் அறிமுகமானார். சம்பவத்தன்று அந்த வாலிபர், மாணவியை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்பு அவர்களிடமிருந்து தப்பித்து தனது வீட்டிற்கு மாணவி வந்திருக்கிறார். தன்னை வாலிபர் ஒருவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததை பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசில் புகார் செய்தனர்.
மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர். அவரை பாலியல் பலாத்காரம் செய்த ஹிரிடே, ஜெயக்கிருஷ்ணன்(21), ரபீக்(22), அபிஜித்(21) ஆகிய 4பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாணவி பாலியல் பலாத்காரத்தில் தேடப்பட்டு வந்த வர்கலா மினி குன்னு பகுதியை சேர்ந்த முகமது நபால், முகமது சாஜத், அகமது ஷா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.