தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடியின் சகோதரர் மகளுக்கு “சீட்” மறுப்பு..

அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் போட்டியிட விரும்பிய பிரதமர் மோடியின் சகோதரர் மகளுக்கு கட்சியின் புதிய விதிமுறைகளின்படி சீட் மறுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் ராஜ்கோட், அகமதாபாத், வதோதரா, சூரத், பாவ்நகர் மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட மொத்தம் ஆறு மாநகராட்சிகளுக்கு 21ம் தேதியும், 81 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 231 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு வரும் 28ம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நகரில் போடக்தேவ் ரேஷன் கடை நடத்தி வரும் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹ்லாத் மோடியின் மகள் சோனல் மோடி என்பவர், பாஜக சார்பில் அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஏஎம்சி) போடக்தேவ் வார்டில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார்.
ஆனால், நேற்று பாஜக தனது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்ட போது, சோனல் மோடியின் பெயர் அதில் இடம்பெறவில்லை. அதிர்ச்சியடைந்த அவர், கட்சியின் மூத்த தலைவர்களுடன் தனக்கு சீட் ஒதுக்கீடு செய்யாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜக மாநில தலைமையிடம் தேர்தலில் போட்டியிட சீட் கோரியுள்ளதாக, சோனல் மோடி கடந்த செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனல் மோடி தேர்தலில் போட்டியிட சீட் வழங்காதது குறித்து பாஜக மாநில பிரிவு தலைவர் சி.ஆர்.பட்டீலிடம் கேட்டபோது, ‘குஜராத் பாஜக சமீபத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி கட்சித் தலைவர்களின் உறவினர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் சீட் கொடுக்க முடியாது என்பதுதான். விருப்பமனு தாக்கல் செய்த சோனல் மோடி, தான் பிரதமர் மோடியின் சகோதரர் மகள் என்று தெரிவிக்கவில்லை. பாஜக தொண்டராக தனக்கு சீட் கோரியிருந்தார். இருந்தும் விதிகளின் படி அவருக்கு சீட் வழங்கவில்லை’ என்றார்.