20 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதம்.. இட்லி வியாபாரி கொலை..?
மகாராஷ்டிர மாநிலத்தில் 20 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இட்லி வியாபாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மீரா சாலையில் இட்லி வியாபாரம் செய்து வந்தவர் வீரேந்திர யாதவ் (வயது 26). நேற்று காலையில் இவரது கடைக்கு வந்து சாப்பிட்ட மூன்று வாடிக்கையாளர்கள், தங்களுக்கு 20 ரூபாய் தரவேண்டியிருப்பதாக கூறி உள்ளனர்.
இதனை வீரேந்திர யாதவ் மறுக்க, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றிய நிலையில் 3 நபர்களும் சேர்ந்து வீரேந்திர யாதவை கீழே பிடித்து தள்ளி உள்ளனர். இதில் அவரது தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்குப் போராடிய அவரை, அங்கிருந்த மற்ற நபர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார். 20 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாத்தில் இட்லி வியாபாரி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி நயா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 நபர்களையும் தேடிவருகின்றனர்.