போதைப்பொருள் கடத்தல் மையமா இந்தியா? நீதிபதிகள் கேள்வி

போதைப்பொருள் கடத்தல் மண்டலமாக இந்தியா பயன்படுத்தப்படுகிறதா என சென்னை உயர் நீதிமன்றம் என்றுகேள்வி எழுப்பியுள்ளது.
சமீபத்தில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனால் சமூகம் சீரழிவதை முக்கிய விசயமாக கருதுவதாக தெரிவித்தனர். அத்துடன், வழக்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், மத்திய – மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் இதுதொடர்பாக கூறியதாவது, “போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் இயல்பு, அளவு என்ன? அவை எப்படி அழிக்கப்படுகிறது. வெளிநாட்டவருக்கு தொடர்பு உள்ளதா?
போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தடுப்பு காவல் சட்டத்தில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? அந்த வழக்குகளிலிருந்து எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எந்த காரணத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற போதைபொருட்களை பயன்படுத்துபவர்கள் என்ன பாதிப்புகளை சந்திக்கிறார்கள்?
போதைப்பொருள் பயன்படுத்துவோரால் என்ன குற்றங்கள் நடக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் ஈடுபடுகிறார்களா? போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க மையங்கள் ஏதும் உள்ளதா?
போதை பொருள் கடத்தலுக்கு வேலையில்லா திண்டாட்டம் தான் காரணமா? மாணவர்களும், இளைஞர்களும் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்களா? போதை பொருள் கடத்தல் மையமாக இந்திய நாடு பயன்படுத்தப்படுகிறதா? கஞ்சா போன்ற போதை பொருட்கள் எங்கு விளைவிக்கப்படுகின்றன
போதைப்பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன. கடந்த 10 ஆண்டுகளில் போதை பொருள் கடத்தலில் எவ்வளவு தொகை சம்பந்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகள் மற்றும் குற்றங்களை கையாள ஏன் தனிப்பிரிவை உருவாக்க கூடாது. ” என்று சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.