குழந்தைகளுக்கான டயபர்களில் நச்சுப்பொருள்… அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயபர்களில் பத்தேலேட் (Phthalates) என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளை வளர்ப்பதில் தற்போது முக்கியமாக பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று டயபர். குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்கள் அதனை வாங்கதான் உடனடியாக செல்கிறார்கள். விளையாடும் போது, தூங்கும் போது என பெரும்பாலான நேரங்களில் அதனை போட்டுக் கொண்டே குழந்தைகள் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் அந்த டயபரால் உங்கள் குழந்தைகளுக்கு அபாயகரமான பாதிப்பு ஏற்படும் என்று ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லியை சேர்ந்த டாக்ஸிக்ஸ் லிங்க் (Toxics Link) என்ற தனியார் நிறுவனம் ஒன்று இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. அதில், குழந்தைகளின் டயபரில் பத்தேலேட் (Phthalates) என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளது. இதனால் உடலுக்கு பலவகையான பாதிப்புகள் ஏற்படும். சுமார் 19 பிராண்டுகளை சேர்ந்த டயபரில் இந்த பரிசோதனையை மேற்கொள்ளும் போது, அவற்றில் இந்த நச்சு வேதிப்பொருள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு டயபரை பயன்படுத்தும்போது பத்தலேட் வேதிப்பொருள் எளிதில் உடலுக்குள் செல்லும் ஆபத்து குறித்தும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதன் விளைவாக குழந்தைகளுக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், இனப்பெருக்க கோளாறுகள் ஏற்படும். இந்த டயபர்களை குப்பையில் எறிவதால், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும்.
தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டயபரில் ப்தலேட் வேதிப்பொருள் கலப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பத்தலேட் கலந்த டயபர்களுக்கு இந்தியாவில் மட்டும் தடை விதிக்கப்படவில்லை. இது தொடர்பாக இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வை நடத்திய நிறுவனத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.