வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம்; தமிழக பா.ஜ.க அறிவிப்பு

‘முருகனை போற்றும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து, வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என, தமிழக பா.ஜ., தலைவர், முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுள்களையும் தரக்குறைவாக விமர்சித்து, சுரேந்திர நடராஜன் என்பவர், ‘கருப்பர் கூட்டம்’ என்ற, ‘யு டியூப்’ சேனலில் வெளியிட்டு வருகிறார். இவரது பின்னணியில், சமூக விரோத, தேச விரோத, ஹிந்து விரோத, அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன என்ற எண்ணம், அமைதியை விரும்பும், தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ் கடவுள் முருகனை போற்றும், கந்த சஷ்டி கசவம், ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும், தினசரி ஒலிக்கும், சிறந்த பக்தி பாடலாகும். முருக பக்தர்களை அவமானப்படுத்தும் நோக்கில், சுரேந்திர நடராஜன் போன்ற கும்பல் திட்டமிட்டு செயல்படுகிறது.அவரை கைது செய்ய வலியுறுத்தி, பா.ஜ., நிர்வாகிகள் அனைவரும், அவரவர் வீடுகளுக்கு முன், 16ம் தேதி காலை, 10:30 மணிக்கு, முருகப்பெருமான் படம் மற்றும் கொடியுடன், கண்டன போராட்டம் நடத்த வேண்டும்.
இதுபோல், தமிழகத்தில் உள்ள, கோடிக்கணக்கான முருக பக்தர்களும், இறை நம்பிக்கை உள்ள அனைவரும், அவரவர் வீட்டின் முன், அறப்போராட்டம் நடத்த வேண்டும்.முருக பக்தர்களின் மனம் புண்படும் வகையில் செயல்படுவோர், யாருடைய பின்புலத்தில் இருந்தாலும், இவர்களைப் போன்றவர்களை எதிர்ப்பதில், பா.ஜ., உறுதியாக நிற்கும். இவ்வாறு, முருகன் கூறியுள்ளார்.