சூரியனில் பூமியை விட பெரிய அளவிலான கரும்புள்ளி ஒன்று கண்டுபிடிப்பு!!

சூரியனில் பூமியை விட பெரிய அளவிலான கரும்புள்ளி உருவாகி உள்ளதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், இதனால் செயற்கை கோள்களுக்கு ஆபத்து என எச்சரித்துள்ளனர்.
இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகம்மது தலபா கூறியதாவது, “சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களை காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் கரும் புள்ளியாக தோன்றுகிறது. தற்போது பூமியை விட பெரிய அளவிலான கரும்புள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கரும்புள்ளிக்கு சைக்கிள் 25 என பெயிரிடப்பட்டுள்ளது.
கருப்பு புள்ளியை சுற்றி உள்ள இடத்தில் வெப்பம் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது என்றால் புள்ளி உள்ள இடத்தில் வெப்பம் சுமார் 4 ஆயிரத்து 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம். இதுபோன்ற சூரிய புள்ளிகள் 11 ஆண்டுகால இடைவெளியில் தோன்றுகிறது. இந்த சூரிய புள்ளிகளை ரேடியோ டெலஸ்கோப் எனப்படும் சிறப்பு தொலைநோக்கி கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் பூமியை விட பெரிதான அளவில் உள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த சூரிய புள்ளியால் வரும் 2022ம் ஆண்டில் பூமியில் சில விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கை கோள்கள் கரும்புள்ளியால் சூரியனில் ஏற்படும் சூரியப் புயலால் பாதிப்பு அடையும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சூரிய புயலால் கடந்த 2003-ம் ஆண்டில் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டு இருந்த 2 செயற்கைக்கோள்கள் சேதமடைந்தது. இதுவரை இதுபோன்ற விளைவுகளால் 28 செயற்கைக்கோள்கள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.