வாஷிங்மெஷினில் சிக்கிக்கொண்ட கல்லூரி மாணவி! குடிபோதையின் உச்சம்..
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 21 வயதான பல்கலைக்கழக மாணவி ரோஸி கோல், தன் தோழிகளுடன் சேர்ந்து மதுபானம் அருந்தியதால் போதையில் தள்ளாடினார். குடியால் நிதானத்தை இழந்த அவர், விளையாட்டாக வாஷிங்மெஷினில் புகுந்துள்ளார். ஆனால் அவர் அதற்குள் சிக்கிக்கொண்டார்.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். ஆபத்தில் இருந்து மீண்ட பெண் ரோஸி, இனிமேல் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட முயற்சிக்கமாட்டேன் என்று தெரிவித்தார். இருபது நிமிடங்களாக வாஷிங்மெஷினில் சிக்கிய அவர், தீயணைப்பு வீரர்களால் மெல்ல மீட்கப்பட்டுள்ளார்.
இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோவை மாணவி ரோஸியும் அவரது தோழி லிடியா டன்வெல்லும் டிக்டாக் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அது தற்போது பலரால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
இதுபற்றிய செய்தியை வெளியிட்டுள்ள வேல்ஸ் இணையதளம், “தீயணைப்பு வீரர்கள் மரங்களில் இருந்து பூனைகளைக் காப்பாற்றுவார்கள். அவர்கள் வாஷிங்மெஷினில் இருந்து மாணவர்களையும் காப்பாற்றுவார்கள்” என்று பல்கலைக்கழக மாணவி வேடிக்கையாக கூறியதாக தெரிவித்துள்ளது.