விண்வெளியில் விடாத அமெரிக்கா – சீனா சண்டை….!

அமெரிக்காவும் சீனாவும் ஒருவருக்கொருவர் எதிரி நாடுகளைப் போல் செயல்பட்டு வருகின்றன. கொரோனாவை சீனாதான் பரப்பியது என்றுகூறி, அதனை சீன வைரஸ் என்றே அழைத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதேபோல் அமெரிக்க ராணுவத்தினர்தான் சீனாவில் வைரஸை பரப்பி விட்டனர் எனப் பதில் தாக்குதல் நடத்தியது சீனா.

கொரோனாவுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான வார்த்தைப் போர் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த மோதல் விண்வெளி வரை நீண்டுள்ளது. வரும் ஜூலை 30-ம் தேதி செவ்வாய்க்கிரகத்துக்கு ஒரு ரோவரை அ னுப்பி ஆய்வு செய்யவுள்ளது அமெரிக்காவின் நாசா நிறுவனம். அதற்கு முன்னதாகவே இன்று தியான்வென் – 1 (Tianwen-1) என்ற விண்கலத்தை சீனா ஏவியுள்ளது. சீனாவின் ஹைனன் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து லாங்மார்ச் 5 ராக்கெட்டின் மூலம் தியான்வென்1 விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாட்டின் விண்கலங்களும் பிப்ரவரி 2021-ல் செவ்வாயில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் விண்வெளியிலும் தொடங்கவுள்ளது. சீனா இன்று அனுப்பியுள்ள தியான்வென் விண்கலம், ஆர்பிட்டர் , ரோவர் ஆகிய கருவிகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2021, பிப்ரவரி மாதத்திலிருந்து சுமார் 90 நாள்கள் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி ஆய்வு நடத்தவுள்ளது.

சீனா தற்போதுதான் செவ்வாய் கிரகத்துக்கு முதன் முதலாக ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது செவ்வாய்க் கிரகத்தின் மண், புவியியல், கட்டமைப்பு, சுற்றுச்சூழல், வளிமண்டலம் மற்றும் நீர் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்யவுள்ளது. ‘தியான்வென் மட்டும் வெற்றிகரமாகச் செவ்வாயில் தரையிறக்கப்பட்டால் அது ஒரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்’ என சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.