ரஜினி காட்டிய இ-பாஸ் போலி?

கடந்த 20ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்தபடி கார் ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம், அதற்கு அடுத்த நாள் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனது மகள் சவுந்தர்யா, மருமகன் விசாகன், பேரனுடன் இருக்கும் ஒரு புகைப்படமும் வெளியானது.
ரஜினிகாந்த் முறையாக இ-பாஸ் வாங்கித்தான் சென்றாரா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. காரணம், சாமானியர்களுக்கு, சாவுக்கு செல்வதாக விண்ணப்பித்தால் கூட, அனுமதி கிடைப்பதில்லை.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றாரா என ஆய்வு செய்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றார். அதன்தொடர்ச்சியாக, நேற்று ஒரு ஆவணத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில், அவருக்கு இ-பாஸ் வழங்கப்பட்ட தேதியாக ஜூலை 22ஆம் தேதியும் (நேற்று முன்தினம்), பயண தேதியாக ஜூலை 23ஆம் தேதியும் (நேற்று) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரஜினி கேளம்பாக்கத்தில் இருந்தது 20, 21ஆகிய தேதிகளாகும். அதாவது, பயணம் செய்துவிட்டு, இ-பாஸ் எடுத்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் ரஜினிக்கு எதிராக ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சிஸ்ட்டத்தை சரிசெய்ய கிளம்பியுள்ள ரஜினியே, இவ்வாறு சிஸ்ட்டத்தை மீறாலாமா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதே, காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை பார்க்க விரும்பியும், அவருக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. அதனால், தற்கொலை செய்து கொண்டார். ஆனால், ரஜினி போன்றோருக்கு, மருத்துவ காரணங்கள் என்று பொய்யாக போட்டாலும், உடனே கிடைத்துவிடுமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரஜினியை எப்படியாவது முதல்வராக்கி விடலாம் என்று முயற்சி செய்து வரும் பி.ஜே.பி. கட்சிக்கு, இந்த சம்பவம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.