தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, இன்று (ஜூலை 25) புதிய உச்சமாக 2 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்று மட்டும் புதிதாக 6,988 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களில் 62 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 115 ஆய்வகங்கள் மூலம் இதுவரை 22 லட்சத்து 87 ஆயிரத்து 334 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் கொரோனா தொற்றால் 89 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 66 பேர் அரசு மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,409 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை (92,206), செங்கல்பட்டு (11,308), திருவள்ளூர் (11,008), காஞ்சிபுரம் (6,361) ஆகிய மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களில் மதுரை (9,302), விருதுநகர் (5,193) ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.