சுகாதாரத்துறையின் அலட்சியதால் தள்ளுவண்டியில் மூதாட்டி உடலை எடுத்துச் சென்ற அவலம்!!!
![](https://thambattam.com/storage/2020/08/id14_0_sMeboSkEWO-780x470.jpg)
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், வயிற்றுப்போக்கு காரணமாக அருகே உள்ள கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சிகிச்சையில் இருந்த போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மூதாட்டி வீடு திரும்பிய நிலையில், இரு தினங்களுக்கு முன்னர், அவரை தொடர்புகொண்ட சுகாதாரத்துறையினர், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், வீட்டில் தனிமைப்படுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அந்த மூதாட்டி, நேற்று உயிரிழந்தார்.
![](https://thambattam.com/storage/2020/08/id14_0_sMeboSkEWO-2-1024x537.jpg)
இச்சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர், விரைவாக உடலை அக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சுமார் 12 மணி நேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வராததால், அக்கம் பக்கத்தினர் கொடுத்த அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி, மூதாட்டியின் உடலை, தள்ளுவண்டியில் வைத்து, கூடலூர் மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். முக்கிய வீதிகளின் வழியே தள்ளுவண்டியில் சடலத்தை வைத்து கொண்டு செல்லப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதே போல, சில தினங்களுக்கு முன்னர், கொடுவிலார்பட்டியில், கொரோனா பாதித்த நபரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராத்தால், ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.