பிரணாபின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை…

“முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. அவருக்கு, ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, 10ம் தேதி, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், பிரணாப் முகர்ஜியின் மூளையில், ரத்தக்கட்டு இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக அறுவை சிகிச்சை மூலம், அந்த ரத்தக்கட்டு அகற்றப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. ‘தீவிர சிகிச்சை பிரிவில், ‘வென்டிலேட்டர்’ உதவியுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரின் இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சீராக உள்ளன’ என கூறப்பட்டு உள்ளது.இது குறித்து, பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, டுவிட்டரில், ‘என் தந்தை, கவலைக்கிடமான நிலையில் இருந்தாலும், அவரின் உடல்நிலை மோசமடையவில்லை.’வெளிச்சம் பட்டால், அவர் கண்களை சுருக்கி கொள்கிறார். அதில் சிறிய முன்னேற்றம் தென்படுகிறது’ என, பதிவிட்டு உள்ளார்.