கர்ப்பிணி பெண்ணையே சிறைக்கம்பி எண்ண வைத்த லாக்டவுன்…. காவல்துறையையே கண்கலங்க செய்த ஓர் உண்மை சம்பவம்!!!

சென்னை: எண்ணூர் பகுதியில் நிறைய மீனவ கிராமங்கள் உள்ளன.. குப்பம், தாழங்குப்பம், நெட்டுகுப்பம் இப்படி நிறைய பகுதிகள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் சிலர் ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களது ஆடுகள் அடிக்கடி காணாமல் போவதாக புகார்கள் வந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து 3 வாரங்களாக புகார் வரவும் போலீசார் விசாரணையில் துரிதமாயினர்.
இந்நிலையில், சம்பவத்தன்று, 2 பேர் பைக்கில் வந்தனர்.. ரோட்டோரம் படுத்து கொண்டிருந்த ஆடுகளை எடுத்து பைக்கில் ஏற்றி கொண்டு கிளம்பி உள்ளனர். இதை அங்கிருந்தோர் சிலர் பார்த்துவிட்டு, இவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பிறகு எண்ணூர் போலீசாரிடம் கொண்டு போய் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் பெயர் கார்த்திக், காவேரி என்பது தெரியவந்தது.. இருவரும் கணவன் – மனைவி ஆவர். 2 பேருக்குமே 27 வயசாகிறது. காவேரி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளாராம். ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்திருக்கிறார். ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலையை கார்த்தி செய்து வந்துள்ளார். கல்யாணம் ஆகி ஒரு வருஷமாகிறது.
வீட்டை எதிர்த்து கொண்டு கல்யாணம் செய்து, திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த சமயத்தில் லாக்டவுன் போட்டுவிட்டதால் 2 பேருக்குமே வேலை போய்விட்டது. வறுமை வாட்ட, பசி துரத்த ஆடுகளை திருடி பிழைத்து வந்துள்ளனர். லாக்டவுன் என்பதால் சாலைகள் வெறிச்சோடி இருக்கவும், ஆடுகள் ரோட்டில் சுதந்திரமாக திரிந்து வந்து கொணடிருப்பதும் இவர்களுக்கு சாதகமாகிவிட்டது.
திருடிய ஆடுகளை திருவல்லிக்கேணி பகுதியில்தான் விற்றுள்ளனர். ஒரு ஆடு விற்றால் 3 ஆயிரம் கிடைக்குமாம். அதை வைத்துதான் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள். இதுவரை 20 ஆடுகளை இவர்கள் திருடினார்களாம். நடந்து வந்து திருடினால் யாருக்காவது சந்தேகம் வரும் என்பதால் டூவீலரில் வந்து திருடியுள்ளனர். காவேரி இப்போது நிறைமாத கர்ப்பிணியாம். இருப்பினும் எண்ணூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
நன்றாக படித்து, பட்டம் வாங்கி, ஐடி கம்பெனி வேலையில் இருந்த ஒரு பெண் இப்படி ஆடு திருடும் நிலைமைக்கு வந்துள்ளதை நினைத்து அதிர்ச்சியாக உள்ளது. அதேபோல, கர்ப்பிணி மனைவியின் பசிக்காகவே இப்படி திருடியதாக கணவன் சொல்வது அதைவிட வேதனையாக இருக்கிறது என காவல்துறையினரே தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் எத்தனை கொடுமைகளை எல்லாம் இந்த லாக்டவுன் கொடுக்க இருக்கிறதோ தெரியவில்லை!