“எல்லா நாளும் 90 மைல் வேகத்தில் பந்து வீச யாரும் ரோபோ கிடையாது”. இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் பாய்ச்சல்!

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 92 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்த போதிலும், இரண்டு நாட்களின் முதல் சீசனில் மட்டுமே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு இவர்களால் நெருக்கடி கொடுக்க முடிந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து பந்துவீச்சு மிகப்பெரிய அளவில் இல்லை.
ஆனால் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அப்பாஸ், ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களில் ஜாஃப்ரா ஆர்சர் திடீர் பவுன்சராகவும், அதிவேகமாகவும் பந்து வீசக்கூடியவர். ஆனால் மான்செஸ்டரில் அவரின் பரபர பந்து வீச்சை காண இயலவில்லை.
59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஜாஃப்ரா ஆர்சர் கூறுகையில் ‘‘நாங்கள் நினைத்த மாதிரி ஆட்டம் செல்லவில்லை. எங்களுடைய ஏராளமான பந்துகள் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியது. ஆனால் அவைகள் கேட்ச்-ஆக மாறவில்லை. உணவு இடைவேளைக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து எங்களை நெருக்கடிக்குள்ளாக்கினர். ஆனால், மற்றொரு டெஸ்ட் போட்டியில் நாங்கள் நினைத்தவாறு சென்றால், கட்டாயம் 8 அல்லது 9 விக்கெட்டை வீழ்த்தி விடுவோம்.
ஒவ்வொரு நாளும் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீச இயலாது. யாரும் ரோபோ கிடையாது. இந்த ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் ஆகவே இல்லை. காலையில் மட்டும் சற்று ஒத்துழைத்தது. அதன்பின் பந்து டர்ன் ஆக ஆரம்பித்து விட்டது.’’ என்றார்.