இனி மருத்துவர் பரிந்துரையின்றி பாராசிட்டமால் மாத்திரை கிடைக்கும்!
பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி வழங்கக் கூடாது என்ற உத்தரவு போடவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், மருந்துக்கடைகளில் பாராசிட்டமால் மாத்திரைகள் மருத்துவர்களின் பரிந்துரையின்றி வழங்கப்படுவதில்லை. குழந்தைகளுக்கு சாதாரண ஜுரம் வந்தாலும் அவர்களுக்கு சிரப் தர முடியாமல் தாய்மார்கள் அவதியுறுகின்றனர். இதனால், ஜோயல் சுகுமார் என்பவர், பாராசிட்டமால் மாத்திரைகளை மருந்துக்கடைகளில் வழங்க உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ‘பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி வழங்கக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கவில்லை’ என தமிழக அரசு தெரிவித்தது. மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரையை வாங்க மருத்துவர்களின் பரிந்துரை தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த விளக்கத்தை ஏற்று, மருந்தகங்களில் தடையின்றி பாராசிட்டமால் கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.